Saturday, 31 October 2015

விவசாயம்




சற்றே நின்று நாம் சிந்திக்க வேண்டிய தருணம்,

விவசாயி, இவன் அழுகிறான்,
சரி, அழட்டும்.
அழுத பின் என்ன செய்கிறான்.
தனக்கான நிலை என்ன என்பதை அறிய மறுக்கிறான்.

நம் நாட்டின் முதுகெலும்பாம் இவன்,
அனைவரும் சொல்வது.
அப்படியெனில், எனது கேள்வி..
இந்தியா முதுகெலும்பில்லாமல் தான் செயல்படுகிறதா...

இங்கே விவசாயி எங்கிருக்கிறான்,
இருந்தால் காட்டுங்களேன்.
கல்லறையை நோக்கி பயணிக்க வேண்டாம்.
அல்லது,
காலத்தை பின்நோக்கி செலுத்த வேண்டாம்.

நாம் பார்த்த காடு, கழனிகள் எங்கே?
நாம் ஓடிய வாய்க்கால், வரப்புகள் எங்கே?
நாம் பழகிய ஆடு, மாடுகள் எங்கே?
அசை போட்டு பாருங்கள் உங்கள் கடந்த காலங்களை.

விளைநிலங்களெல்லாம்
விலையாகிப்போயின.
விளைவித்தவர்கள் எல்லாம்
விடைபெற்றுக்கொள்கின்றனர்.

பார்வைகள் மாறலாம்,
காட்சிகள் மாறலாமா?
உழுகின்ற கால்கள் மாறலாம்.
உழுகின்ற கழனி மறையலாமா?


படைப்பு    
 தமிழ் ரசிகன்

 


விவசாயி



மண்ணில் தவமிருந்து
மண்ணோடு வாழ்பவன்.
தான் வளர்த்த பயிரினை
தாரை வார்த்துக் கொடுத்தவன்.

கால் வயிறு நிரம்ப
கால் கடுக்க உழைப்பவன்,
தன் வீட்டில் உலை கொதிக்க
தரணிக்கு உணவளித்தவன்.

விளைவித்தவன்
விலை வைக்க முடியாது தவிக்கிறான்.
இடையில் வந்தவன்,
இன்னும் கொஞ்சம் இறுக்குகிறான்.

வங்கியில் கடன் வாங்கி
வட்டி கட்டி அழுகிறான்.
அரசாங்கத்தை நம்பி
அரைக்கோவனத்தோடு நிற்கிறான்.

வந்தவனுக்கெல்லாம்
வரிச்சலுகை கொடுத்தவன்,
உழுது வாழும் உழவனுக்கென
உள்ள மானியத்தையும் மறுக்கிறான்.

கடைசிச்சொட்டு நீருக்காக,
கடைமடையை எட்டிப்பார்த்து காத்திருந்தவன்,
ஏமாற்றத்தின் உச்சத்தில்
ஏக்கமுற்று உடைந்து போனான்.

கடைசிவரை காத்திருந்து
கடவுளும் கைவிடவே,
உயிரென எண்ணியிருந்த மண்ணில்
உடலையும் சேர்த்துக்கொள்ள சென்றுவிட்டான்.

என்னவென்று கூறுவது இவனை
எங்கள் நாட்டு விவசாயி என்றா? - அல்லது
உணவளித்து வாழ்வளித்த
உயிருள்ள கடவுள் என்றா...

படைப்பவன் கடவுள் என்றால்
இவனும் கடவுள் தான்.
கொடுப்பவன் இறைவன் என்றால்
இவனும் இறைவன் தான்.



படைப்பு    
 தமிழ் ரசிகன்


Monday, 12 October 2015

ஜன்னல் ஓரம் காத்திருந்தேன்

அவளுக்காக,
எதிர்பார்த்து ஜன்னல் ஓரம்
காத்திருந்தேன்.
எதிர்பார்க்கவில்லை,
தென்றலாய் வந்து
என்னை
தழுவிக்கொள்வாள் என்று.

காற்றும் சுற்றி வருகிறது

குதிர் ஒன்று இருந்தால் 
கொண்டு வாருங்கள் ,
இவளை அதனுள் அடைத்து 
புதைக்கலாம்,
காற்றும் அல்லவா 
இவளையே சுற்றி வருகிறது.

Saturday, 10 October 2015

அவளது மூச்சுக்காற்றுக்காக

அவன்
மழையில் நனைந்து நின்றபோதும்,
அவனது
வியர்வை துளிகள் மட்டும்
தனிமையில் தவமிருக்கின்றன,
அவளது மூச்சுக்காற்றுக்காக.


அவள் விழிகள்

அவள் விழிகள்
ஒரு திறந்த புத்தகம் தான்.
ஆனால்,
படித்தும் பொருள் புரியவில்லை.

Thursday, 8 October 2015

போர் குற்றவாளி

இவள்
இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே
வன்முறையை தூண்டியவள்.
இவளை
காணும்போதெல்லாம்
இமைகள் இயங்க மறுக்கின்றன,
விழிகள் அசைய மறுக்கின்றன.

Tuesday, 22 September 2015

கால மாற்றம்

சித்திரை இரவில் 
கயிற்று கட்டிலில் படுத்து 
தென்னை ஓலைக்கு இடையில்  
ரசித்து பார்த்த நிலவை 
இன்று  
தேடி பாரக்கிறேன்
தென்னை ஓலையை,
அங்கே வளர்ந்து நிற்கும் 
கட்டிடங்களுக்கு இடையில்.


விவசாயி

பட்டினி என்பது அறியாது
உழைத்து உண்ட சாதி,
படுத்து கிடந்த கழனியை
இன்று பரிதவித்து தேடுது.

அன்று பஞ்சம் என்ற ஒன்று
பரிதவித்து நின்றது,
இன்று தஞ்சம் என்று வந்தது
தலைவிரித்து ஆடுது.

கழனியிலே நடந்து நடந்து 
அளந்தாச்சு - கால்களாலே,
இன்று அளந்து அளந்து
நட்டாச்சு – கானிகால்களாலே.

தாகம் என்று வந்தோருக்கு
மொண்டு கொடுத்த சாதி,
தண்ணீர் என்று தேடி - இன்று
கால் கடுக்க நடக்குது.

வரப்பேறி வழிந்தோடும் நீரை 
வாய்க்காலுக்கு திருப்பி விட்ட சாதி,
விழி நீரை வழித்து போட்டு
பயிர் வளர காத்துக்கிடக்குது.

கல்லணை கட்டி, நீரை தேக்கி வைத்த சாதி
விழிமேல் கை வைத்து எதிர்பாத்து காத்திருக்குது
கேட்டவருக்கு எடுத்து கொடுத்த சாதி
இன்று கேட்டுகிட்டு கையையேந்தி நிக்குது.

காத்திருந்து காத்திருந்து காணாமல் போன சாதி,
உழுது உழுது ஓடாய் போன சாதி,
முயன்று முயன்று முடியாது போன சாதி,
விழி பிதுங்கி, அழிந்து கொண்டிருக்குது அந்த சாதி,

காலமெல்லாம் கழனியில் உழைத்துவந்த சாதி,
கால் வலிக்க இன்றும் காத்து கிடக்கும் சாதி,
வாய்ப்பு என்று வந்தால் வென்று காட்டும் சாதி,
விவசாயி என்று பெயர் பெற்ற சாதி.
                                          
      

Tuesday, 15 September 2015

நட்சத்திரங்கள்

இபொழுது 
தெரிந்து கொண்டேன்,
இவள் சிரிப்பிலிருந்து 
சிந்திய முத்துக்கள் தான்
வானில் தஞ்சம் கொண்ட 
நட்சத்திரங்கள் என்று 

பயம்

சூரியனும்  
சுழலும் இவள்  கண்களை பார்க்க
பயந்து தான் 
கண்களை கூசச்செய்து 
மூடிக்கொள்ள செய்கிறான்,
இல்லையேல் 
பணிந்து சென்றுவிடுவான் 
சுழலும் இவள் கண்களுக்கு பின்னால்,
தினமும் இவன் சுற்றும் 
பூமியரசியையும் வேண்டாமென்று.
 

தன்னை மறந்து

இவள் இதழ்கள் என்னதேன் கூடா
இவள் சிந்தும்
ஒவ்வொரு துளி புன்னைகையிலும்
சுவைக்கிறது என் இதயம்.

விழிகள் என்னமடல் அவிழ்க்கும் மலர்களா,
இமைக்கும் ஒவ்வொரு முறையும்
அகல மறுக்கிறது என் விழிகள்
ன்னை மறந்து...

Thursday, 10 September 2015

சிந்தனையும் செயலும்

துணிந்தவன் துவளுவதில்லை
துவண்டவன் துணிவதில்லை.

துவண்டவன் துணிந்தால்
முயற்சி என்பது விதையாகும்.

துணிந்தவன் முயன்றால்
வெற்றி என்பது மாலையாகும்.

இன்பங்களும் இன்னல்களும்
இரு கண்களை போல,

இருப்பவை இரண்டானாலும்
காட்சி என்பது ஒன்றுதான்.

கலைஞனின் கண்களுக்கு
கல்லும் சிற்பம் தான்.

கவிஞனின் கற்பனைக்கு
புதர்கள் கூட பூந்தோட்டங்கள் தான்.

அழகான சிந்தனை
உன்னை சிறந்தவனாகும்.

ஆபத்தான சிந்தனை
உன்னை சீரழிக்கும்.

சிந்தித்திப்பவன் அமரனாவான்
நிந்திப்பவன் அரக்கனாவான்.

நீ அமரனாவதும்

அரக்கனாவதும் உன் சிந்தனையில்.