Saturday, 31 October 2015

விவசாயம்




சற்றே நின்று நாம் சிந்திக்க வேண்டிய தருணம்,

விவசாயி, இவன் அழுகிறான்,
சரி, அழட்டும்.
அழுத பின் என்ன செய்கிறான்.
தனக்கான நிலை என்ன என்பதை அறிய மறுக்கிறான்.

நம் நாட்டின் முதுகெலும்பாம் இவன்,
அனைவரும் சொல்வது.
அப்படியெனில், எனது கேள்வி..
இந்தியா முதுகெலும்பில்லாமல் தான் செயல்படுகிறதா...

இங்கே விவசாயி எங்கிருக்கிறான்,
இருந்தால் காட்டுங்களேன்.
கல்லறையை நோக்கி பயணிக்க வேண்டாம்.
அல்லது,
காலத்தை பின்நோக்கி செலுத்த வேண்டாம்.

நாம் பார்த்த காடு, கழனிகள் எங்கே?
நாம் ஓடிய வாய்க்கால், வரப்புகள் எங்கே?
நாம் பழகிய ஆடு, மாடுகள் எங்கே?
அசை போட்டு பாருங்கள் உங்கள் கடந்த காலங்களை.

விளைநிலங்களெல்லாம்
விலையாகிப்போயின.
விளைவித்தவர்கள் எல்லாம்
விடைபெற்றுக்கொள்கின்றனர்.

பார்வைகள் மாறலாம்,
காட்சிகள் மாறலாமா?
உழுகின்ற கால்கள் மாறலாம்.
உழுகின்ற கழனி மறையலாமா?


படைப்பு    
 தமிழ் ரசிகன்

 


விவசாயி



மண்ணில் தவமிருந்து
மண்ணோடு வாழ்பவன்.
தான் வளர்த்த பயிரினை
தாரை வார்த்துக் கொடுத்தவன்.

கால் வயிறு நிரம்ப
கால் கடுக்க உழைப்பவன்,
தன் வீட்டில் உலை கொதிக்க
தரணிக்கு உணவளித்தவன்.

விளைவித்தவன்
விலை வைக்க முடியாது தவிக்கிறான்.
இடையில் வந்தவன்,
இன்னும் கொஞ்சம் இறுக்குகிறான்.

வங்கியில் கடன் வாங்கி
வட்டி கட்டி அழுகிறான்.
அரசாங்கத்தை நம்பி
அரைக்கோவனத்தோடு நிற்கிறான்.

வந்தவனுக்கெல்லாம்
வரிச்சலுகை கொடுத்தவன்,
உழுது வாழும் உழவனுக்கென
உள்ள மானியத்தையும் மறுக்கிறான்.

கடைசிச்சொட்டு நீருக்காக,
கடைமடையை எட்டிப்பார்த்து காத்திருந்தவன்,
ஏமாற்றத்தின் உச்சத்தில்
ஏக்கமுற்று உடைந்து போனான்.

கடைசிவரை காத்திருந்து
கடவுளும் கைவிடவே,
உயிரென எண்ணியிருந்த மண்ணில்
உடலையும் சேர்த்துக்கொள்ள சென்றுவிட்டான்.

என்னவென்று கூறுவது இவனை
எங்கள் நாட்டு விவசாயி என்றா? - அல்லது
உணவளித்து வாழ்வளித்த
உயிருள்ள கடவுள் என்றா...

படைப்பவன் கடவுள் என்றால்
இவனும் கடவுள் தான்.
கொடுப்பவன் இறைவன் என்றால்
இவனும் இறைவன் தான்.



படைப்பு    
 தமிழ் ரசிகன்


Monday, 12 October 2015

ஜன்னல் ஓரம் காத்திருந்தேன்

அவளுக்காக,
எதிர்பார்த்து ஜன்னல் ஓரம்
காத்திருந்தேன்.
எதிர்பார்க்கவில்லை,
தென்றலாய் வந்து
என்னை
தழுவிக்கொள்வாள் என்று.

காற்றும் சுற்றி வருகிறது

குதிர் ஒன்று இருந்தால் 
கொண்டு வாருங்கள் ,
இவளை அதனுள் அடைத்து 
புதைக்கலாம்,
காற்றும் அல்லவா 
இவளையே சுற்றி வருகிறது.

Saturday, 10 October 2015

அவளது மூச்சுக்காற்றுக்காக

அவன்
மழையில் நனைந்து நின்றபோதும்,
அவனது
வியர்வை துளிகள் மட்டும்
தனிமையில் தவமிருக்கின்றன,
அவளது மூச்சுக்காற்றுக்காக.


அவள் விழிகள்

அவள் விழிகள்
ஒரு திறந்த புத்தகம் தான்.
ஆனால்,
படித்தும் பொருள் புரியவில்லை.

Thursday, 8 October 2015

போர் குற்றவாளி

இவள்
இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே
வன்முறையை தூண்டியவள்.
இவளை
காணும்போதெல்லாம்
இமைகள் இயங்க மறுக்கின்றன,
விழிகள் அசைய மறுக்கின்றன.