Friday, 29 July 2016

ஆண்களின் வெட்கம்

மண்ணில்
கட்டை விரலால்
கோலம் போடுவது பெண்கள் மட்டுமா?
சில ஆண்களும் தான்.

ஐயமென்றால், பாருங்கள்,
தன் காதலை
சொல்ல காத்திருக்கும்
ஆண்களை.

இது தான் காதலோ!!!

பெண்கள்
மௌனமாய்ப் புன்னகைத்தாலும்
புயலடிக்கிறது.
சில ஆண்களின்
இதயத்தில். 

ரசனை

ஒவ்வொரு நாளும்
புதுவித அழகாய்த்  தெரிவது
பெண்களுக்கே
உண்டான தனி சிறப்பு.

இன்று வரை புரியவேயில்லை

ஆண்களை
நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
பெண்களை புரிந்துகொள்ள
முயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இன்றுவரை.

ஒரு பெண்

நான் என்பது
வெறும் மெய்யல்ல.
ஒரு
உயிர் என்பதை
உணருங்கள்.

வெற்றித்திருமகள்

பெண்
வெற்றிக்குப்
பின்னால் இருப்பவள்.
ஆம். ஒருவேளை,
அவள் முன்னே இருந்திருந்தால்
ஆண்கள் இல்லாமலே கூட
போயிருக்கலாம்.

Saturday, 23 July 2016

கவிஞனுக்கு

ரசனையோடு கூடிய
கற்பனை போதுமே.
காட்சிகள் எதற்கு?
கவி எழுத!!!

தொலைந்து போயின

செத்தை சருகுகளை இரையாக்கி,
பசியாற்றும் தீயின்
மெல்லிய ஒளியில்,

மலர்கள் மலரும் 
ஒலி கேட்கும் - அந்த 
முன் காலை இருளில் 

மௌனமாய் அமர்ந்து 
இருளோடு சேர்த்து - நம் 
மனக்கவலையையும் அகற்றிய பொழுதுகள்,

நம் கிராமத்தோடு 
மறைந்து போயின.