Saturday, 13 August 2016

பனித்துளி

ஓர்நாள் வாழும் மலரும்,
அதுநாள்கூட இராத பனியும்,
கொண்ட உறவின் அழகுதான்
இயற்கையின் கவிதை.


மலர்களின் மீது
தான் கொண்ட 
காதலினால்,
தினம்தினம் வந்து
முத்தமிட்டு மடிகிறது
பனித்துளி.



காத்திருக்கும் நிலமகளை
அன்போடு
தினம்வந்து அரவணைக்கும்
பனித்துளியை,
தன்
செங்கதிர் நீட்டி
பிரித்திடுகிறான் பகலவன்.



பலவீனம்

உன் பலவீனத்தை
அடுத்தவர்
பயன்படுத்திக்கொண்டிருக்கும் வரை,
நீ
உன் கண்களால்
இவ்வுலகை காண இயலாது.

உன் பாதை உன் கையில்

நீ
ஓடும் நீராய்  இருந்தாலும்,
ஆறாய் ஓடு.
வாய்க்காலில் நீ ஓடினால்,
உன் பயணம் என்பது
பிறர் வகுத்த பாதையில்
முடியும். 

அறிவதற்காக

பிரிவு என்பது
பிரிவதற்காக அல்ல.
பிரிந்தவரைப்  பற்றி
அறிவதற்காக 

பிரிவு

நினைவுகள் என்பது
இருக்கும் வரை,
பிரிவுகள் என்பது
நிரந்தரம் இல்லை.

வெட்கம்

வெட்கம், விற்கும் விலை
எவ்வளவு என்று
கேட்பவர்களுக்கு மத்தியில்,
முகத்தில் வெட்கத்தோடு இருந்த
அவளை பார்த்தபோதே
நான் உறைந்து போனேன். 

Friday, 29 July 2016

ஆண்களின் வெட்கம்

மண்ணில்
கட்டை விரலால்
கோலம் போடுவது பெண்கள் மட்டுமா?
சில ஆண்களும் தான்.

ஐயமென்றால், பாருங்கள்,
தன் காதலை
சொல்ல காத்திருக்கும்
ஆண்களை.

இது தான் காதலோ!!!

பெண்கள்
மௌனமாய்ப் புன்னகைத்தாலும்
புயலடிக்கிறது.
சில ஆண்களின்
இதயத்தில். 

ரசனை

ஒவ்வொரு நாளும்
புதுவித அழகாய்த்  தெரிவது
பெண்களுக்கே
உண்டான தனி சிறப்பு.

இன்று வரை புரியவேயில்லை

ஆண்களை
நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
பெண்களை புரிந்துகொள்ள
முயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இன்றுவரை.

ஒரு பெண்

நான் என்பது
வெறும் மெய்யல்ல.
ஒரு
உயிர் என்பதை
உணருங்கள்.

வெற்றித்திருமகள்

பெண்
வெற்றிக்குப்
பின்னால் இருப்பவள்.
ஆம். ஒருவேளை,
அவள் முன்னே இருந்திருந்தால்
ஆண்கள் இல்லாமலே கூட
போயிருக்கலாம்.

Saturday, 23 July 2016

கவிஞனுக்கு

ரசனையோடு கூடிய
கற்பனை போதுமே.
காட்சிகள் எதற்கு?
கவி எழுத!!!

தொலைந்து போயின

செத்தை சருகுகளை இரையாக்கி,
பசியாற்றும் தீயின்
மெல்லிய ஒளியில்,

மலர்கள் மலரும் 
ஒலி கேட்கும் - அந்த 
முன் காலை இருளில் 

மௌனமாய் அமர்ந்து 
இருளோடு சேர்த்து - நம் 
மனக்கவலையையும் அகற்றிய பொழுதுகள்,

நம் கிராமத்தோடு 
மறைந்து போயின.

Wednesday, 13 April 2016

காத்திருப்போம் அடுத்த காமராசருக்காகவும், கலாமிற்காகவும்

நல் உள்ளங்கள் நல்லாட்சி செய்த நாடு,
தமிழ் உணர்வு நீங்காத, தன்னலம் இல்லாத,
வந்தோரை வரவேற்று, நல்வாழ்வு வாழ
வழிவகுத்த தலைவர்கள் சென்ற பாதை இது.

நான் என்ற எண்ணம் இல்லை, எனது என்ற உரிமை இல்லை,
மெத்த படித்த மேதாவி இல்லை,
தன்னிலை மறந்த தலைவர்கள் இவர்கள் இல்லை .
நாம் என்ற சிந்தை கொண்டு வாழ்தவர்கள்.

நண்பன், எதிரி என்ற பேதம் இல்லை ,
அவன்யார் சொல்வதற்கு என்ற மமதை  இல்லை,
அறிவிற் சிறந்தோர் எதிர்ப்பவர் ஆனாலும்,
அனைவரையும் அரவணைத்து வாழ்ந்த தலைவர்கள்.

மக்களின் மீது அன்புகொள்ளும் மனம் உண்டு,
அனைவருக்கும், அனைத்தும் என்ற எண்ணம் உண்டு,
நாகரிக அரசியல் சிந்தனை உண்டு,
அதனை வெளிப்படையாய் செயல்படுத்தும் திறன் உண்டு.
இன்றைய அரசியலில் எத்தனை பேருக்கு இவையெல்லாம் உண்டு???

சேர்த்த சொத்துக்களின் பட்டியல் உண்டு,
அவைகள் எங்குள்ளன என்று தெரியாதவர் உண்டு,
சேர்த்ததெல்லாம் போதாது என்பவர் ஏராளம் உண்டு,
மேலும் நம்மை சுரண்ட, இவர்களுக்கு வாரிசும் உண்டு.
இன்றைய அரசியலில் எத்தனை பேருக்கு இவையெல்லாம் இல்லை???

கல்வி அறிவு தேவை இல்லை,
படித்தவருக்கு இங்கு இடமும் இல்லை.
பழி பாவங்களுக்கு அஞ்ச வேண்டியதும் இல்லை,
மக்களை நினைக்கவும், மதிக்ககவும் வேண்டியதும் இல்லை.

சேவை ஒருபோதும் தகுதியாவதில்லை,
அடிப்படை தகுதியென அரசியலுக்கு எதுவுமில்லை .
படித்தவனால் மாற்றம் என்பது நேரும் வரை
நமக்கு நல்ல வழி கிடைக்கபோவதில்லை.

நமக்கெல்லாம் நல்வழி கிடைக்க,
காத்திருப்போம் அடுத்த காமராசருக்காகவும், கலாமிற்காகவும்.

n  மலரட்டும் நல்லாட்சி

தோல்வியுற்றவன்

மறந்து போயும் இறவேன்,
இறந்தாலும் உனை மறவேன்.

என் காதல் மனர்சுவடுகள் அல்ல,
பாறையில் பதிந்த படிவங்கள்.

நீண்டு வளரும் தாடிக்குள் மறைக்கலாம்,
மதியை மயக்கும் மதுவுக்குள் மூழ்கலாம்.

இருந்தும் மறுக்கிறேன்.
உனது சுவடுகளை அழிக்க.

நிலவும் வானும் தான் நீயும், நானும்.
சிறு பொழுதும் பிரிவை உணர்ந்ததில்லை.

இனி ஒரு பொழுதும் சேர வழி இல்லை.
என் வானிற்கு மட்டும் என்றுமே அமாவாசை தான்.

எவரிடமும் கேட்க மனமில்லை,
இருந்தும் அறிகிறேன் உனைபற்றி அனைத்தும்.

சிந்தித்துப்பார்த்தேன்,
கடவுள் கொடுத்த வரம் இது.

தனிமை என்னும் உலகின்
துணையில்லா  அரசன் நான்.

பிறர் சென்ற சுவடுகள் ஆயிரம் இருந்தும்,
என் பாத சுவடுகள் தனியாய் தான் பதிகின்றன.


என்றென்றும் உன் நினைவுகளுடன்தோல்வியுற்றவன்

சில வரிகள்

தன்னை ரசித்தவர் எவரும்
என்னை வெறுத்ததில்லை.
என்னை வெறுக்கும் எவரும்
தன்னை ரசிப்பதில்லை.

                                 --- தனிமை
*******************************************

என்னை உணர்ந்தவர்கள்
என்னை பற்றி உரைத்ததில்லை.
என்னை பற்றி உரைத்தவர்கள்
என்னை உணர்ந்ததுமில்லை.

                              --- மரணம்
******************************************

விட்டுகொடுப்பவன் நல்லவனாகிறான்.
மன்னிப்பவன் மனிதனாகிறான்.
ஆனால்,
மறப்பவன் மட்டுமே மகான் ஆகிறான்.
                                                    ---- மறப்போம்
******************************************

Monday, 14 March 2016

போதும், போதும் இந்த மக்கள் ஆட்சி


மன்னன் என்பவனும் மகேசன் தான்.
மக்கள் என்பவரும் மன்னர்கள் தான்.
மன்னர் ஆட்சியில்.

அரசு என்பது ஆண்டவன் தான்,
மக்கள் என்பவர்கள் அடிமைகள் தான்.
மக்கள் ஆட்சியில்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அரசாட்சி,
அறுபது ஆண்டுகள் அரசியலாட்சி,
இதில் எங்கே நடந்தது மக்கள் ஆட்சி!!!

அடிமையாய் இருந்தோம் ஆங்கிலேயனிடம்
இன்றும் இருக்கிறோம் அரசியல் தெரிந்தவர்களிடம்.
போதும் போதும் இந்த மக்கள் ஆட்சி.

எண்ணி எண்ணி தொழுதாலும்
இங்கே நல்லவர் என்றும், தீயவர் என்றும் பேதம் இல்லை.

கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்,
வாயிருந்தும் ஊமையாய் இருந்தோம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும்.

நீண்ட வரிசையில் காத்திருந்தோம்,
ஒற்றை விரலால், நம்மை நாமே அடிமை ஆக்கினோம்.

படித்தவர்கள் பலகோடி இருந்தும்
படித்தவன் எவனும் பதவியில் இல்லை.

IAS, IPS ஆனால் மட்டும் என்ன - இவர்கள் 
அரசியல்வாதிகள் தூக்கி எறியும் காகிதங்கள் தானே.

படித்தும் கூட பயனில்லை,
சட்டம் கூட துணையில்லை.

நேர்மையான தேர்தல் உண்டு,
நேர்மையான அரசியல்வாதி உண்டா?

இனியேனும்,
சிந்தனை என்பதை வளர செய்வோம்
மக்கள் ஆட்சி என்பதை மலர செய்வோம்.

வானம்

அழகிற்கு ஆயிரம் உவமைகள் கூறலாம் ,
அனைத்திற்கும் ஒரே உவமையாய் உன்னை கூறலாம்.

நீ கருத்தாலும் உன்னை ரசிப்பவர் இங்குண்டு,
நீ வெளுத்தாலும் உன்னை ரசிப்பவர் இங்குண்டு.

உன்னை தூற்றுபவர் தூற்றும் நேரம்
உன்னை போற்றுபவரும் இங்குண்டு.

எங்களை மகிழ்விப்பவளும் நீதான்,
எங்களை மயங்கிட செய்பவளும் நீதான்.

நீ அழுதாலும்,
எங்கள் வாழ்வை செழித்திட செய்பவளும் நீதான்.

நீ சிரித்தாலும்,
எங்கள் வயிறை வாடிட செய்பவளும் நீதான்.

எங்களின் ஏற்றமும், தாழ்வும் நீதான்.
எங்களின் இரவும், பகலும் நீதான்.

சிவந்த திலகம் அணிந்த 
தீர்க்க சுமங்கலி நீதான்.

வண்ணங்கள் ஆயிரம் கொண்டவளும் நீதான்,
ஒலி (இடி), ஒளியை (மின்னல்) தாங்கியவளும் நீதான்.

அதிசயத்தின் பிறப்பிடம் நீதான்,
பூமித்தாயின் காதலனும் நீதான்.

வளர்ந்த பயிருக்கும்,
வாடிய பயிருக்கும் தந்தையும் நீதான்.

கோள்களின் உறைவிடமும் நீதான்,
கோளத்தின் கூரையும் நீதான்.

பஞ்சபூதங்களில் உயர்ந்தவனும் நீதான்,
குடையாய் நின்று எங்களை காப்பவனும் நீதான்!!

நட்பு

விதையின்றி முளைத்த செடி,

பந்தலின்றி படர்ந்த கொடி,

கிளையின்றி துளிர்த்த இலை,

மலரின்றி வீசும் மனம்.



உறவின்றி கிடைத்த உன்னதம்,

அளவின்றி கிடைக்கும் ஆனந்தம்,

குறைவின்றி வைக்கும் நம்பிக்கை,

சுதந்திரமாய் வாய்த்த அடிமை.



முயற்சியின்றி கிடைத்த வெற்றி,

தொய்வின்றி கிடைக்கும் உறுதுணை,

வேண்டுகோளின்றி உதவும் கரம்.

தட்சணையின்றி காக்கும் கடவுள்.



நீயின்றி, நானின்றி நாமென்று சொல்வது!!!

இரவு, பகல் பாராது உடன் வந்து சேர்வது!!!

மூன்றெழுத்து மந்திரத்தில் மிக முக்கியமாய் போற்றுவது!!!


அது , அம்மா - அப்பாவிற்கு அடுத்தபடியானது!!!

விலகிநின்று பார்

எப்போதும் மற்றோரை காண்பவரே
உன்னை நீ கண்டாயோ?
சற்று விலகிநின்று பார்.

பிறர் பாதை அடைப்பதனால்
உன் பாதை திறந்திடுமா?
சற்று பொறுத்திருந்து பார்.

உள்ளங்கையில் நீர் இருந்தால்,
உள்ளமது குளிர்ந்திடுமா?
சற்று அருந்தி பார்.

மனதிற்குள் ஒலி எழுந்தால்
உலகிற்கது கேட்டிடுமா?
சற்று உரக்க சொல்லிப்பார்.

முயன்றது முடியாவிடில்
முயற்சி நின்றிடுமா?
சற்று முயன்று பார்.

கல்லால் செய்ததனால்
கடவுள் மனம் கல்லாகிடுமா?
சற்று உணர்ந்து பார்.

உளமார வாழ்வதனால்
வாழ்வானது வளம்பெருமா?
சற்று காலம் வாழ்ந்துபார்.

வாழ்க்கை என்பது களிப்பாகும்,
வெற்றி என்பது உனதாகும்.
சற்று இவைகளை முயன்றுபார்.

Thursday, 18 February 2016

ஒருதலை காதல்

தெரியவில்லை   
இருந்தும் பார்க்கிறேன்,
நான் இருக்கும்  
உந்தன் இதயத்தை.
உணரவில்லை 
இருந்தும் சுவாசிக்கிறேன்,
நீ கடந்த பின்னும் வீசும் 
உந்தன் சுவாசத்தை.
கேட்கவில்லை 
இருந்தும் உணர்கிறேன்,
ஒலி பெருக்கி வைத்தும் கேட்காத 
உந்தன் சிரிப்பொலியை.
பார்க்கவில்லை 
இருந்தும் ரசிக்கிறேன்,
என்னை பாராத  
உந்தன் விழிகளை.
தொடவில்லை 
இருந்தும் அணைக்கிறேன்,
உன்னை இன்னும் அழகாய் காட்டும் 
உந்தன் நிழலை.
துணையில்லை 
இருந்தும் நடக்கிறேன்,
துணையாய் இருக்கும் 
உந்தன் காதலை எண்ணி.
உணவில்லை 
இருந்தும் வாழ்கிறேன்,
கேள், என்னோடு கலந்திருக்கும்  
உந்தன் ஜீவனை.
காதலில்லை  
இருந்தும் காத்திருக்கிறேன்,
நிச்சயம் ஒருநாள்  
எந்தன் கரம் பிடிப்பாய் என்ற நம்பிக்கையில்.